ஒவ்வோர் ஆண்டும் ஒரு படைப்பாளரை முழுதுமாகவோ அல்லது அவரது முக்கியமான படைப்புகள் அனைத்தையுமோ வாசிப்பதை முன்பெல்லாம் திட்டமிட்டுச் செய்வேன். ஜெயகாந்தன், தி ஜானகிராமன், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி, பூமணி, அம்பை, பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரை இப்படித்தான் வாசிக்க முடிந்தது. இந்த வருடம் திட்டமிடாமலேயே அது நடந்திருப்பது தெரிகிறது.
இந்த வருடம் ஆர்.சூடாமணியின் சில கதைகளை மீள் வாசிப்பு செய்யும் எண்ணத்துடன் தொடங்கி, தனிமைத்தளிர் தொகுப்பு வாசிப்பில் முடிந்தது.
எம்.டி.வாசுதேவனின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் முழுதும் வாசித்திருந்தபோதும், மஞ்சுவை மலையாளத்தில் மீள் வாசிப்பு செய்தபோது, அவரது சிறுகதைகளையும் மலையாளத்தில் வாசிக்கும் ஆர்வம் எழவே அதுவும் சாத்தியமாகியது. தொடுதிரை தொகுப்பில் தொடங்கி, மலையாளத்தில் கல்பற்றா நாராயணனின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததும் அப்படித்தான்.
ஆங்கிலத்தில் மேரி ஆலிவரின் கவிதைகளை மொத்தமாக மீள் வாசிப்பு செய்ய நினைத்து ஆண்டுத் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்கள் அவரது கவிதைகளுடன் பயணித்தேன். சில்வினியா ஒக்காம்போவின் சிறுகதை மற்றும் குறுங்கதைகள் தொகுப்பு, லிடியா டேவிஸின் குறுங்கதைத் தொகுப்புகள் சிலவற்றை வாசித்தது, அவர்களது எழுத்துலகத்தை ஆழ்ந்தறியும் வாய்ப்பாக அமைந்தது.
எப்போதும் என் மேசையில் இருப்பது கவிதைப் புத்தகங்கள்தான். தினமும் கவிதை வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் நண்பர்களிடம் அவ்வாண்டு வெளியாகும் தொகுப்புகளின் விவரம் கேட்டு வாங்கிவிடுவது வழக்கம். கவிதை மற்றும் கவிதை சார்ந்த புத்தகங்களை வாசிப்பது என்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு செயலாகவே இருக்கிறது. புதிய தொகுப்புகள் ஒரு பக்கம் என்றால் மீள்வாசிப்பிற்கும் கவிதைகளைத்தான் அதிகம் நாடுவேன். ஒரு புத்தக அலமாரி முழுக்க கவிதைகளும், கவிதைகள் சார்ந்த புத்தகங்களும் மட்டுமே வைத்திருக்கிறேன். தோன்றும்போதெல்லாம் எடுத்துப் புரட்டுவததும் அன்றைய மனநிலைக்கேற்றவாறு கவிஞர்களைத் தேர்வு செய்து வாசிப்பதும் வழக்கம். இந்த வருடம் கவிதை வாசிப்பு குறைந்திருப்பது தெரிகிறது. சிறுகதைகள் குறித்து நண்பர்களுடன் நடந்த தொடர் உரையாடல், சிறுகதை வாசிப்பின் பக்கம் என்னை அதிகம் திருப்பியிருக்கிறது என்று நினைக்கிறேன். தொகுப்புகளாக வாசித்தவை தவிர, பத்திரிக்கைகளில் வெளிவருபவை, நண்பர்கள் பரிந்துரைப்பவை என்று உதிரியாக வாசிக்கும் சிறுகதைகளும் கவிதைகளும் தனி.
சீன மொழியின் பழங்கவிதைகளை ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே பயணி தமிழாக்கம் செய்த தொகுப்பும் கைக்குக் கிடைத்தது. தமிழில் அவற்றை வாசித்தபோது, சங்கப் பாடல்களை வாசித்தது போன்றே இருந்தது.
ஷங்கர்ராமசுப்ரமணியனின் ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தொகுப்பு. 2024இல் அதை மீள்வாசிப்பு செய்தபோது, எத்தனை முறை வாசித்தாலும் “நல்ல கவிதைகள் ஒவ்வொரு முறையும் நமக்குத் தருவதற்கென்று புதிதாக ஒன்றைத் தனக்குள் வைத்திருக்கும்” என்ற என் நம்பிக்கை மேலும் வலுபெற்றது.
வருடத் தொடக்கத்தில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியல் போடுவதும், நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பது, இறுதியில் வாசித்தவற்றின் பட்டியலைப் பார்ப்பதும் உற்சாகம் தருவதாக இருந்தது. சமீபமாக, பட்டியலிடுவதில் ஆர்வம் குறைந்து வருவது தெரிகிறது. படித்த புத்தகங்களைக் குறித்த சிறுகுறிப்பு எழுதி வைக்கும் பழக்கமும் நண்பர்களுடன் வாசித்தவை குறித்து உரையாடுவதும் தொடர்கிறது.
தொடங்கிய புத்தகத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்கிற எண்ணமும் மாறியுள்ளது. சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்துவிடும், நேரவிரயம் என்று. அதைத் தவிர்க்க goodreads மற்றும் நண்பர்களின் பரிந்துரை உதவுகிறது. ஒரு சில படைப்புகள் நல்ல படைப்புகளாகவே இருந்தாலும், அது நமக்கானது இல்லை அல்லது அதற்கான காலம் இது இல்லை என்ற புரிதலோடு சில புத்தகங்களைத் தனியே வைத்துவிடுகிறேன்.
2024இல் வாசித்தவற்றுள் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இவை.
- புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- கிருஷ்ணப் பருந்து – ஆ மாதவன்
- காகித மலர்கள் – ஆதவன்
- கங்கை எங்கே போகிறாள் – ஜெயகாந்தன்
- ஆத்துக்குப் போகணும் – காவேரி
- ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
- அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய
- ஆறாவது வார்டு – செகாவ்
- வாஸவேச்வரம் – கிருத்திகா
- அசடு – காசியபன்
- புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
- மஞ்சு – எம்.டி.வாசுதேவன் நாயர் (மீள்)
- இலட்சிய இந்து ஓட்டல் – விபூதிபூஷன் பந்தோபாத்யாய
- 1984 – George Orwell
- The Strange Library – Haruki Murakami
- Foster – Claire Keegan
- Cold Enough for Snow – Jessica Au
- The song of the Bird – Anthony de Mello
- The Man who planted Trees – Jean Giono
- A shining – Jon Fosse
- The vegetarian – Han Kang
- The cat who saved the books – Sosuke Natsukawa
- The visitor – J.H.Low (Graphic novel)
- Kampong boy – Lat ( Graphic Novel)
- Ten loves of Nishino – Hiromi Kawakami
- ஆயிரம் சந்தோஷ இலைகள் – ஷங்கர்ராமசுப்ரமணியன்(மீள்)
- துஆ – சபரிநாதன்
- வால் – சபரிநாதன் (மீள்)
- தேதியற்ற மத்தியானம் – தேவதச்சன்
- காற்றைக் கேட்கிறவன் – கல்யாண்ஜி
- ப்ளக் ப்ளக் ப்ளக் – ராணி திலக்
- ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது – பொன் முகலி
- கல்லாப் பிழை – மோகனரங்கன்
- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை – பயணி
- புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர், தமிழில் செங்கதிர்
- The Shambhala – Anthology of Chinese Poetry
- Selected poems of Ayyappa panicker – Kalpatta Narayanan (Malayalam)
- Irikkapporuthi – Ammu Deepa (Malayalam)
- Karinkutty – Ammu Deepa (Malayalam)
- Neelakoduveli – T.P.Rajeevan (Malayalam)
- Selected Poems of Kalpatta Narayanan (Malayalam)
- Orkkappurangal + Kalpatta Narayanan (Malayalam)
- Soorpanagaiyum matra kavithagalum – Kalpatta Narayanan (Malayalam)
- A thousand mornings – Mary Oliver
- Felicity – Mary Oliver
- Devotions – Mary Oliver
- What kind of woman – Kate Baer
- And yet – Kate Baer
- தனிமைத் தளிர் – ஆர்.சூடாமணி
- சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை
- சாந்தன் சிறுகதைகள்
- இரட்டை இயேசு – விஜய ராவணன்
- மகாமாயா – குமாரநந்தன்
- திமிரி – ஐ. கிருத்திகா
- தங்கமயில் வாகனம் – தமிழ்நதி
- வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர்
- And Softly Go the Crossings – Danielle Lim
- Thus were their faces – Silvinia Ocampo
- The hole – Hiroko Oyamada
- Varieties of disturbances – Lydia Davis
- The yellow wall-paper – Charlotte Perkins Gilman
- Ten things my father never taught me – Cyril Wong
- Short Stories of M.T.Vasudevan Nair (Malayalam)
- கதையும் புனைவும் – பா வெங்கடேசன்
- பாரதி நினைவுகள் – ம.கோ.யதுகிரி அம்மாள்
- தெருவென்று எதனைச் சொல்வீர் – தஞ்சாவூர்க் கவிராயர்
- தரைக்கு வந்த தாரகை – தஞ்சாவூர்க் கவிராயர்
- Freedom from the known – J. Krishnamurti
- On fear – J.Krishnamurti